கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 March 2020 11:15 PM GMT (Updated: 25 March 2020 10:34 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

கொடிய கொரோனா நோயைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முக கவசங்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் 1,000 ரூபாய், ‘கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர் கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டும் 1,000 ரூபாய்’ என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்குமே நிவாரணமும், நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில், பிற மாநிலங்களிலிருந்து வந்து இங்கு பணிபுரியும் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி உண்டா? என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை.

சிறு வியாபாரிகள் அனைவருமே பதிவு செய்திருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே, பூ விற்பவர்களில் இருந்து அனைத்து நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகளுக்கு(பதிவு செய்யப்பட்டவர்கள், பதிவு செய்யாதவர்கள் என்று பாரபட்சம் காட்டாமல்) இந்த நிவாரணமும், நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த மாதம் பணிபுரிந்தவர்களுக்கு இரு நாட்களின் ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் போதாது.

ஓட்டுனர்கள்(ஆட்டோ, ஓலா, ஊபர் டாக்சி உள்ளிட்ட) அனைவரும் வாங்கியிருக்கும் வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணைப் பணம் வசூலை வங்கிகள் 3 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வங்கி அதிகாரிகளை அழைத்துப் பேசி அறிவுறுத்த வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் வாங்கிய கடன்கள் மீதான எவ்வித வசூலும் மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ளக் கூடாது. குறிப்பாக டிட்கோ உள்ளிட்ட தமிழக அரசு நிறுவனங்கள் கொடுத்துள்ள கடன் வசூலைத் தள்ளிவைத்து வட்டி, அபராத வட்டி போடுவதையும் 3 மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும். கொரோனா தடுப்பில் உள்ளாட்சி அமைப்புகள் பங்காற்றிட குறைந்தபட்சம் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிற்கும் உடனடியாக ரூ.3 லட்சம் சிறப்பு நிதியுதவி வழங்கிட வேண்டும்.

மேலும், 10, 11-ம் வகுப்புத் தேர்வுகள் எழுதியவர்கள் குறித்தும் முடிவு எடுக்கவில்லை. கொரோனா அச்சத்தின் உச்சத்தில் நடத்தப்பட்ட 12-ம் வகுப்புத் தேர்வை 34 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. ஆகவே, இந்த 2 விஷயங்களிலும் பதற்றத்தில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கும், கவலையில் உள்ள பெற்றோருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தால்தான் கொரோனா நோயை உறுதியுடன் தடுக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரசின் ‘தனிமைப்படுத்துதல்’ முயற்சி வெற்றி பெற அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக் கும் குறைந்தபட்சம் ரூ.5,000 நிதியுதவி வழங்கிட வேண்டும். அதனை அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேராக அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனா தடுப்பு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், 144 தடை உத்தரவை அமல்படுத்தும் போலீசார் ஆகியோருக்கு ரூ.5,000 சிறப்பு ஊதியமாக வழங்கிட வேண்டும்.

‘ஊரடங்கு பிறப்பித்து விட்டோம். எல்லாம் முடிந்து விட்டது’ என்று அமைதியாக இருக்காமல், மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் தாமதமின்றி நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, கொரோனா நோய்த் தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கிட வேண்டும். அதற்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள 3,280 கோடி ரூபாய் நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story