ஏழை மக்களுக்கு மத்திய அரசு உதவி: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
ஏழை மக்களுக்கு மத்திய அரசு உதவிகளை அறிவித்ததற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் அச்சத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 80 கோடி ஏழை மக்களுக்கு மத்திய அரசு ரூ.1.70 கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வாடும் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.
அடுத்த 3 மாதங்களுக்கு ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி, பருப்பு, ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.500, குடிமக்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது பொருளாதார நெருக்கடியை குறைக்கும்.
அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு வருங்கால வைப்புநிதி செலுத்தத் தேவையில்லை. அவர்கள் பங்கையும், உரிமையாளர் பங்கையும் அரசே செலுத்தும் என மத்திய அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது.
வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகையில் 75 சதவீத தொகை அல்லது 3 மாத ஊதியத்தை பணியாளர்கள் முன்பணமாக பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story