அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கக் கூடாது - தமிழக அரசு உத்தரவு


அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கக் கூடாது - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 26 March 2020 11:00 PM GMT (Updated: 26 March 2020 9:55 PM GMT)

அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குதான் ஊரடங்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறதே தவிர அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்கு அல்ல’ என்பதை இந்த உத்தரவை அமல்படுத்தும் அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘தோட்டக்கலைத் துறையின் கீழ் வரும் பண்ணைகள், பூங்காக்களில் தண்ணீர் ஊற்றும் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தி பராமரிக்க வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருட்களை மொத்த விற்பனை சந்தைகள், உழவர் மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்ல எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மொத்த விற்பனை சந்தையில் வேளாண் பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கும் தடை உத்தரவு பொருந்தாது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

வேளாண்மை சந்தைக் குழு, சந்தைகளில் உள்ள உணவகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோப்பு உள்ளிட்ட சுத்திகரிப்பு வசதிகளை செய்திருக்க வேண்டும் எனக்கூறியுள்ள ககன்தீப்சிங் பேடி, உழவர் சந்தைகளில் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டருக்கும் மேல் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் எனவும், அனைத்து உரக்கடைகளும் திறந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Next Story