திருடு போக வாய்ப்பு உள்ள மதுக்கடைகளில் இருந்து மதுபானங்களை, குடோன்களுக்கு மாற்றம் செய்யுங்கள் - மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தல்


திருடு போக வாய்ப்பு உள்ள மதுக்கடைகளில் இருந்து மதுபானங்களை, குடோன்களுக்கு மாற்றம் செய்யுங்கள் - மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 26 March 2020 11:15 PM GMT (Updated: 26 March 2020 10:21 PM GMT)

திருடு போக வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் மதுக்கடைகளில் இருந்து மதுபானங்களை குடோன்களுக்கு மாற்றம் செய்யுமாறு மாவட்ட மேலாளர்களுக்கு, மேலாண்மை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, 

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், மூத்த மண்டல மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகளின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிச்செல்லும் சம்பவங்களை தடுக்கும் வகையில், மதுபானங்களை உடனடியாக டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றம் செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட மேலாளர்களிடம் அறிவுறுத்துகின்றனர். இதன்படி, தொலைதூர பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் இருந்து கொள்ளை போகும் சம்பவங்களை தடுக்கும் வகையில் மதுபானங்கள் வெளியே கொண்டு செல்லப்படவேண்டும்.

மதுக்கடைகளில் இருந்து மதுபானங்கள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். ஒருவேளை குடோன்களில் போதுமான அளவுக்கு மதுபானங்களை வைக்க இடவசதி இல்லை என்றால் மாவட்ட மேலாளர்கள் அடையாளம் காணப்படும் மதுக்கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக, தங்களுடைய தாலுகாக்களில் உள்ள பண்டகசாலைகள், குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தற்காலிகமாக வைக்கவேண்டும்.

திருட்டு போவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் பிரதான சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் அமைந்துள்ள மதுக்கடைகளில் உள்ள மதுபானங்களை, அருகே உள்ள கடைகளுக்கு மாற்றிவிடவேண்டும். மதுபானங்களை வைப்பதற்காக குடோன்கள், பண்டகசாலைகள், திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுப்பதற்கு முன்பு, தலைமை அலுவலகத்திடம் இருந்து ஒப்புதல் பெறவேண்டும். இதற்கான வாடகை கட்டணம் குறைவாக இருப்பதையும், ஏப்ரல் மாதம் 15-ந்தேதி வரை வாடகைக்கு எடுக்கவேண்டும் என்பதையும் மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்யவேண்டும்.

மதுக்கடைகளில் இருந்து குடோன்கள், திருமண மண்டபங்களில் மதுபானங்கள் இருப்பு வைத்தால் அங்கு தீ தடுப்பான்கள் பொருத்துவதோடு, கண்காணிப்பு கேமரா பொருத்தியும் கண்காணிக்கவேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்களை சுழற்சி முறையில் நிர்ணயித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவேண்டும். இந்த ஏற்பாடுகளை தவிர போலீஸ் பாதுகாப்பும் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கமிஷனர்களிடம் இருந்து கேட்டு பெறவேண்டும்.

திருட்டு போவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் கடைகளில் இருந்து மதுபானங்கள் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்போகும் செயல் திட்டத்தை மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவிக்கவேண்டும். போதுமான அளவு போலீஸ் பாதுகாப்போடு மதுபானங்களை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும். எந்தெந்த கடைகளில் இருந்து மதுபானங்கள் எந்த இடத்துக்கு மாற்றப்படுகிறது என்ற விவரத்தை மாவட்ட மேலாளர்கள் தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story