அத்தியாவசிய தேவைகளுக்கான ‘பார்சல்’களை எடுத்து செல்ல சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


அத்தியாவசிய தேவைகளுக்கான ‘பார்சல்’களை எடுத்து செல்ல சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 30 March 2020 10:15 PM GMT (Updated: 30 March 2020 9:05 PM GMT)

அத்தியாவசிய தேவைகளுக்கான ‘பார்சல்’களை எடுத்து செல்ல சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவைகள் 24 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. ஆனால் சரக்கு ரெயில்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் இன்றியமையாத தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களை சிறிய ‘பார்சல்’களாக எடுத்து செல்ல, சிறப்பு ‘பார்சல்’ ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிற இந்த காலகட்டத்தில், எந்த ஒரு தடை இல்லாமல் சீராக, சரக்குகள் மற்றும் இன்றியமையாத பொருள்கள் வினியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தடையில்லா ‘பார்சல்’ ரெயில் சேவைகள் வழங்கப்படுகிறது. இது பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களையும், சரக்குகளையும் நாடு முழுவதும் எடுத்துச் செல்ல இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவு காலகட்டத்தில் மருந்து பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள், உணவுப் பொருள்கள் முதலான இன்றியமையாத பொருள்களை சிறிய பார்சல்களாக எடுத்து செல்வது மிகவும் முக்கியம். இந்த மிக முக்கியமான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியன் ரெயில்வே உத்தரவின் பேரில் தெற்கு ரெயில்வே சிறப்பு ‘பார்சல்’ ரெயில்களை இயக்குகிறது.

தெற்கு ரெயில்வேயில் கீழ்க்கண்ட பார்சல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது:-

கோவை-பட்டேல் நகர் (டெல்லி பிராந்தியம்), கோவை- ராஜ்கோட், கோவை-ஜெய்ப்பூர், சேலம்- பத்திந்தா ஆகிய 4 வழித்தடங்களில் மட்டும் தற்போது இந்த ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அத்தியாவசிய பொருட் களை ‘பார்சல்’ மூலம் கொண்டு செல்வதற்கு ரெயில்வேயில் உள்ள ‘பார்சல்’ அலுவலகங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ‘பார்சல்’ சேவைக்கு ஏற்கனவே இருக்கும் கட்டண விதிமுறைகளின் கீழ் ‘பார்சல்’ மற்றும் சரக்கு கட்டணம் வசூல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story