தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை


தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 March 2020 11:00 PM GMT (Updated: 31 March 2020 8:55 PM GMT)

தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டால் வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சென்னை, 

இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேளாண் செயல்பாடுகள், உற்பத்தி, உபகரணங்கள் கொண்டு செல்வது ஆகியவற்றுக்கு மத்திய அரசு விலக்களித்து ஆணை பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில் இந்தியாவில் சில பாகங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டமாக சொந்த இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய நேரத்தில் இப்படி கூட்டம் கூட்டமாகச் செல்வது சட்ட மீறலாகும்.

எனவே இடம் பெயர்ந்து வந்துள்ள மக்களின் பொருளாதார தேவைகளை அறிந்து உதவும் வகையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, இடம் மாறி வந்தவர்கள், ஏழைகள், தேவைகள் உள்ள மக்களுக்கு தற்காலிக தங்குமிடம், உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று புறப்பட்டு வந்தவர்களை சுகாதாரத் துறையின் உத்தரவின்படி 14 நாட்கள் உடல் பரிசோதனை செய்து மாவட்ட கலெக்டர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அருகில் உள்ள இடங்களில் தங்கச் செய்ய வேண்டும்.

இந்த காலகட்டத்தில் கடை உரிமையாளர், வணிக வளாக உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் தங்களின் ஊழியர்களுக்கு எந்தப் பிடித்தமும் இல்லாமல் சம்பளத்தை உரிய காலத்தில் செலுத்தினார்களா? என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.இடம் மாறி வந்தவர்கள் என்றாலும் மற்ற பணியாளர்கள் என்றாலும், வாடகை வீட்டில் இருந்தால் அவர்களிடம் ஒரு மாதத்துக்கான வாடகையை வீட்டு உரிமையாளர் கேட்கக் கூடாது. அப்படிப்பட்ட பணியாளர்களையோ, மாணவர்களையோ வாடகை கேட்டு வற்புறுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story