தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது


தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 1 April 2020 5:04 AM GMT (Updated: 1 April 2020 5:04 AM GMT)

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தென் மாநிலங்களில் தொடங்கியது.

சென்னை

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர்.

இதில் பங்குகொண்டவர்களில் கணிசமான பேர் பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். அவர்களில் 9 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்ததாகவும், மேலும் டெல்லியை சேர்ந்த 24 பேர் அந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டம் நடந்த பகுதியில் தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 335 பேருக்கு சளி, இருமல் இருந்ததால் அவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே, கணிசமான பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் அவர்களுக்கும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் அப்படி வந்துள்ளவர்கள் யார்-யார்? என்பது பற்றியும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் அந்தந்த மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து தென் மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் நேற்று முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சியில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தெலுங்கானா, கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

இது குறித்து தமிழகத்தின் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவ்து:-

டெல்லியில் நடந்த மாநாட்டில் மொத்தம் 1,500 பேர் கலந்து கொண்டனர். இதில் 1,131 பேர் தமிழகத்திற்கு திரும்பியிருந்தனர். அவர்களில் 515 பேரை சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி உள்ளனர். கொரோனா பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நிஜாமுதீனுக்குச் சென்ற அனைவரையும் கண்டுபிடிப்பது  துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கபட்டவர்கள் இந்த பயணிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்களாக இருந்தனர் என கூறினார்.

இதுபோல் ஆந்திராவில் டெல்லிகூட்டத்தில் கலந்து கொண்டவர்களை  கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். மார்ச் 15 முதல் 17 வரை நடைபெற்ற கூட்டத்திற்காக ஆந்திராவின் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் நிஜாமுதீனுக்குச் சென்று உள்ளனர், பெரும்பாலும் ஏபி எக்ஸ்பிரஸ் மற்றும் ஜிடி எக்ஸ்பிரஸ் மூலம் மார்ச் 10 முதல் மார்ச் 20 வரை பயணம் செய்து உள்ளனர்.

குறைந்தது 300 பிரதிநிதிகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  மார்ச் 5 அன்று புறப்பட்ட முதல் குழுவில், குறைந்தது 80 பேர் கேரளாவிற்கு வந்து உள்ளனர் . முதல் கட்ட சோதனையில் அவர்களில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்து உள்ளது. இருப்பினும், விரிவான சோதனை மூலம் நிலைமை மாறக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

டெல்லி சென்று வந்த  கர்நாடகாவைச் சேர்ந்த சுமார் 78 உறுப்பினர்கள் அரசாங்க தனிமைப்படுத்தும் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த்ப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வி) ஜவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில், 29 மாவட்டங்களைச் சேர்ந்த 1,030 பேர் டெல்லி கூட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். ஆதிலாபாத் மாவட்ட அதிகாரிகள் கலந்துகொண்டவர்களின் பட்டியலைத் தயாரித்தனர். ஆதிலாபாத், கும்ராம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல் மற்றும் நிர்மல் மாவட்டங்களில் உள்ள நிர்வாகங்கள் வீட்டிலோ அல்லது சிறப்பு மையங்களிலோ கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

ஆதிலாபாத் மாவட்டத்திலிருந்து 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அடையாளம் காணப்பட்டது, ஆனால் 12 பேர் மட்டுமே ஜமாஅத் பதிவுகளில் உள்ளனர்.

Next Story