ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி


ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 1 April 2020 7:26 AM GMT (Updated: 1 April 2020 7:26 AM GMT)

ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை

சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும், அம்மா உணவகங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு விற்பனை செய்யப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். 

அம்மா உணவகத்தில் உணவை வாங்கி சாப்பிட்டார். மேலும் அங்கு உணவருந்திய பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், அம்மா உணவக ஊழியர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்யவும், உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நலிவுற்ற மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா உணவக திட்டம் மூலம், நாளொன்றுக்கு நான்கரை லட்சம் பேர் உணவருந்துகின்றனர். டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள் நோயின் தாக்கத்தை உணர்ந்து தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும். ஈஷா சிவராத்திரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு உயிரும் முக்கியம். ஒருவர் கூட பாதித்துவிடக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.நோய் தாக்கத்தை உணராமல் சிலர் வெளியே சுற்றுகின்றனர். மருத்துவமனையில் துடித்து கொண்டிருப்பதை பார்த்த பிறகும் 144 தடை உத்தரவை சிலர் அலட்சியம் செய்கிறார்கள்.

ஊரடங்கால் விவசாயிகள் மேற்கொள்ளும் எந்தப் பணிகளுக்கும் தடை இல்லை. வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம்.ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.



Next Story