மத்திய அரசின் நிதி உதவிகள் கிடைக்காவிட்டால் கொரோனா தடுப்பு பணிகள் பாதிக்கும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை


மத்திய அரசின் நிதி உதவிகள் கிடைக்காவிட்டால் கொரோனா தடுப்பு பணிகள் பாதிக்கும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 4 April 2020 10:00 PM GMT (Updated: 4 April 2020 9:02 PM GMT)

மத்திய அரசின் நிதி உதவிகள் கிடைக்காவிட்டால் கொரோனா தடுப்பு பணிகள் பாதிக்கும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் அரசுக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா தடுப்பு பணிகள் மட்டுமின்றி, ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்கு சேர்ந்திருக்கும் நிலையில், அதற்காக மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது.

மத்திய அரசின் நிதி உதவிகள் உடனடியாக கிடைக்காவிட்டால் தமிழக அரசின் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். அது தமிழகத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, கொரோனா தடுப்பு மற்றும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசு கோரியவாறு ரூ.16 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

அத்துடன் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் முன்பணம் ஆகியவற்றையும் மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story