தமிழ்நாட்டில் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே வங்கிகள் செயல்படும்


தமிழ்நாட்டில் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே வங்கிகள் செயல்படும்
x
தினத்தந்தி 16 April 2020 7:45 PM GMT (Updated: 16 April 2020 7:22 PM GMT)

தமிழ்நாட்டில், வங்கிகள் அனைத்தும் மே 3-ந்தேதிவரை பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.

சென்னை, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மாதம் 23-ந்தேதி, தமிழ்நாட்டில் உள்ள வங்கிக்கிளைகளின் பணி நேரத்தை குறைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டும், பொதுமக்களுக்காக திறந்து வைத்திருக்குமாறு வலியுறுத்தினர். அதன்படி, வங்கிகள் செயல்பட்டு வந்தன.

இதற்கிடையே, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு நிவாரண தொகை அறிவித்தது. ஜன்தன் வங்கிக்கணக்குகளில் தலா ரூ.500 போடப்பட்டது. வழக்கமான மாதாந்திர ஓய்வூதிய தொகையும் செலுத்தப்பட்டது.

இத்தகைய பரிமாற்ற தேவைகளுக்காக, வங்கிகள் முழு நேரம் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதை ஏற்று, கடந்த சில நாட்களாக வங்கிகள் மாலை 4 மணிவரை இயங்கின.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், வங்கிகள் மீண்டும் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அளவிலான வங்கி நிர்வாகிகள் கமிட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வங்கிக்கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கும் பணி முடிந்துவிட்டது. அதை பொதுமக்கள் படிப்படியாக எடுத்து வருகிறார்கள். மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால், மக்கள் பிற்பகல் 1 மணிக்குள் வங்கி பரிமாற்றங்களை முடித்து விடுகிறார்கள். எனவே, மே 3-ந்தேதிவரை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிக்கிளைகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டும் செயல்பட வேண்டும்.

ஊழியர்களின் இருப்பை பொறுத்து, சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். ஒரே பகுதியில் ஒரு வங்கியின் இரண்டு கிளைகள் இருந்தால், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து, ஏதேனும் ஒரு கிளை மட்டும் செயல்பட வேண்டும்.

அத்துடன், வங்கிகளுக்கு நேரில் வராமல், மின்னணு பண பரிமாற்றத்தில் ஈடுபடுமாறு வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story