தேர்வுகள், வகுப்புகள் குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
தேர்வுகள், வகுப்புகள் குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில், நடப்பாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று உயர்க்கல்வி துறை அறிவித்து இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு அது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகள், அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த வகுப்புகள், செமஸ்டர் தேர்வுகள், திட்ட மதிப்பீடுகள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
மீண்டும் வகுப்புகள் தொடங்குவதற்கான தேதி மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள், திட்ட மதிப்பீடுகள் அந்த சமயத்தில் எப்போது நடக்கும்? என்பது குறித்து புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story