சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் 5 மாநகராட்சிகளில் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு தொடரும் - தலைமைச் செயலாளர் உத்தரவு


சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் 5 மாநகராட்சிகளில் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு தொடரும் - தலைமைச் செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 29 April 2020 10:00 PM GMT (Updated: 29 April 2020 7:55 PM GMT)

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் 5 மாநகராட்சிகளில் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சில நகர்ப்புறங்களில் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தி 24-ந்தேதியன்று அரசு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 26-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 29-ந்தேதி (நேற்று) இரவு 9 மணிவரையும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 26-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 28-ந்தேதி இரவு 9 மணிவரையும் முழு ஊரடங்கு நீடிக்கும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு முடிந்துவிட்டாலும், ஏற்கனவே மே 3-ந்தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள முந்தைய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை அமல்படுத்த வேண்டும்.

மேலும், கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா தொற்று மேலாண்மையை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story