“பாரத் நெட்” டெண்டருக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்


“பாரத் நெட்” டெண்டருக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
x
தினத்தந்தி 5 May 2020 9:30 PM GMT (Updated: 5 May 2020 8:30 PM GMT)

“பாரத் நெட்” டெண்டருக்கு மத்திய அரசு தடை ஏதும் விதிக்கவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பாரத் நெட்” திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்கும் உன்னதமான உட்கட்டமைப்பு திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் செயல் படுத்தப்படும் ஒரு தகவல் தொழில் நுட்பத் திட்டமாகும்.

இத்திட்டத்திற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி அன்று வலைத்தளம் மூலமாக ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதனிடையில், மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை இத்திட்டத்தை 31-3-2021-க்குள் தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்து ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்ற வேளையில், எதிர்பாராதவிதமாக இந்தியா முழுமைக்கும் கொரோனா நோய் தடுப்பிற்கான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. தகவல் தொடர்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றால் “பாரத் நெட்” திட்டத்தினை மத்திய அரசு நிர்ணயித்த 9 மாத காலத்திற்குள் நிறைவேற்றினால் மட்டுமே இனி வரும் காலங்களில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த முடியும்.

மீறல்கள் இல்லை

மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின்படியும், இதுபோன்ற நேர்வுகளில் ஐகோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையிலும், 2019-ம் ஆண்டு டிசம்பரில் கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியில் சில வரையறைகளை திருத்தங்கள் செய்து, அதாவது 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் “பாரத் நெட்” திட்டத்தினை நிறைவேற்ற திருத்திய ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த வரையறை மீறல்களும் இல்லை.

இந்த நிலையில், அந்த ஒப்பந்தப்புள்ளியில் மேக் இன் இந்தியா கொள்கையின்படி உள்ளூர் தயாரிப்பாளர்கள் போட்டியாளர்களின் வாய்ப்புகளை குறைக்கும் வகையில் சில வரையரைகளை திருத்தங்கள் செய்திருப்பதாக சில அமைப்புகள் தவறான புரிதலோடு புகார் அளித்ததன் பேரில், மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோரிடம் அறிக்கை கோரியுள்ளது.

உண்மைக்கு மாறான அறிக்கை

“50 சதவீதத்திற்கு மேலாக உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும்” என்ற மத்திய அரசின் வரைமுறையை மீறி உள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி வரையறையில், உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் 50 சதவீதத்திற்கு மேலாக பங்கேற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளில், தகுதியுள்ள நபர்கள் யார் வேண்டுமானாலும் இடெண்டர் முறையில் பங்குபெற முடியும் என்ற நிலையிலும், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருக்கும் இந்த ஆரம்ப கட்டத்திலேயே இன்னும் ஒப்பந்ததாரர்கள் முடிவு பெறாத நிலையிலும், அரசியல் உள்நோக்கத்தோடு எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இட்டுகட்டி கூறியிருப்பது, “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, கோழிக்குட்டி வந்ததுன்னு யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு” என்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு ஏற்ப கற்பனை கலந்த கதைகளை கட்டவிழ்த்துவிட்டு, உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டு வருவது வேடிக்கையாக உள்ளது.

தடை செய்யவில்லை

ஒரு புகார் மீது மத்திய அரசு வழக்கமான முறையில், அறிக்கை கோரி அனுப்பிய ஒரு கடித குறிப்பின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியல் செய்வது வியப்பாக உள்ளது. மத்திய அரசு, பாரத் நெட் திட்ட ஒப்பந்தப் புள்ளிகளுக்கு தடை ஏதும் செய்யவில்லை.

அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொலைநோக்கு பார்வையோடு இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story