இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை


இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 May 2020 8:02 PM GMT (Updated: 19 May 2020 8:02 PM GMT)

காட்பாடியில் பிளஸ்-1 முடித்த இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

வேலூர், 

வேலூரை அடுத்த காட்பாடி மாருதி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். கட்டிட என்ஜினீயர். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருந்தனர். மகன் பத்மகுமார் காட்பாடியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.மகள்கள் பத்மபிரியா, ஹரிப்பிரியா. இரட்டை சகோதரிகளான இருவருக்கும் வயது 17. இருவரும் காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து விட்டு பிளஸ்-2 வகுப்பு செல்கின்றனர். தற்போது பள்ளி சார்பில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு ஆன்-லைன் வகுப்புகளை கவனிக்க நேற்று இருவரும் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றனர்.

கீழ்தளத்தில் அவர்களுடைய தாயாரும், மகன் பத்மகுமாரும் இருந்தனர். பிற்பகல் 3 மணி ஆகியும் இருவரும் கீழே இறங்கி வராததால் தாயார் கவுரி மேலே சென்று அறைகதவை தட்டியுள்ளார். நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மகுமாரும் அக்கம் பக்கத்தினரும் ஜன்னலை உடைத்து பார்த்தபோது இரண்டு சகோதரிகளும் அறையில் உள்ள தனித்தனி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். இதை பார்த்த தாயும், மகனும் கதறி அழுதனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அறையின் கதவை உடைத்து இருவரின் உடல்களையும் கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story