இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்ய எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. அரசு ஒப்புக்கொள்ளக் கூடாது மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்ய எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. அரசு ஒப்புக்கொள்ளக் கூடாது மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 May 2020 9:30 PM GMT (Updated: 19 May 2020 8:07 PM GMT)

இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்ய எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. அரசு ஒப்புக்கொள்ளக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவிலேயே முதன்முறையாக, “அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்” வழங்கிய மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முன்னோடித் திட்டத்தை, கொரோனா பேரிடரை “நல்ல சமயம் இது; நழுவ விடக்கூடாது” என்றெண்ணி அதைத் தவறாகப் பயன்படுத்தி, ரத்து செய்ய அ.தி.மு.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏற்கனவே, “தாங்க முடியாத கடன்”, “விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தவிப்பு”, “வாழ்வாதாரம் இழந்ததால் தற்கொலை” எனப் பல துயரங்களையும், இன்னல்களையும் தொடர்ந்து அனுபவித்து வரும் விவசாயிகள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற, கருணையற்ற “பேரிடர் தாக்குதல்” இது.

கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நிதி நிலைமையைச் சீர்செய்ய அனுமதி கேட்கும் மாநிலங்களிடம், “நீங்கள் கடன் பெற வேண்டும் என்றால் முதலில் மின்சார மானியத்தை ரத்து செய்யுங்கள். அதுவும் வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஒரு மாவட்டத்திலாவது செயல்படுத்திக் காட்டுங்கள்” என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிபந்தனை விதிப்பது, மத்திய அரசின் மனதிற்குள் அரவம்போல் புகுந்திருக்கும் “கந்துவட்டி மனப்பான்மையை” காட்டுகிறது.

“இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யும்” நோக்கில், “2020-ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தை” கொண்டுவந்து ஊரடங்கு நேரத்திலும் அதன்மீது மாநிலங்களிடம் கருத்துக் கேட்டிருக்கும் மத்திய அரசு அச்சட்டத்தை நிறைவேற்றும் முன்பே, மின்சார மானியங்களை பறித்துக்கொள்ளும் குறுக்குவழிகளை கடைப் பிடிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

வெள்ளைக்காரத் துரைத்தனத்தை நினைவுபடுத்தும் இந்தக் கெடுபிடியான உத்தரவு, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மட்டுமின்றி, நெசவாளர்கள் மற்றும் வீட்டுப் பயனாளிகள் உள்ளிட்ட இலவச மின்சாரத்தை அனுபவித்து வரும் பல தரப்பட்ட நுகர்வோருக்கும் மிகப்பெரிய ஆபத்தாக மாறியிருக்கிறது. ஆகவே, இந்த “மானியம் ரத்து செய்யும் நிபந்தனையை” மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கடன் வாங்குகிறோம் என்ற பெயரில், தமிழ்நாட்டில் 21 லட்சத்திற்கும் மேலான விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்தையோ அல்லது வேறு நுகர்வோருக்கான இலவச மின்சாரத் திட்டத்தையோ ரத்து செய்ய அ.தி.மு.க. அரசு, எந்தச் சூழ்நிலையிலும், எக்காரணத்தை கொண்டும் ஒப்புக்கொள்ளக் கூடாது.

மாநில அரசுகளுக்கு “கொரோனா கடன்” வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய நிதி மந்திரிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒப்புக்காகக் கடிதம் மட்டும் எழுதிவிட்டு, நிறுத்திக்கொள்ளாமல் அதற்குரிய அழுத்தமும் கொடுத்து, தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச மின்சாரத் திட்டத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய பா.ஜ.க. ஆட்சியைப் பகைத்துக் கொண்டால், ஆட்சியையும், அதிகாரத்தையும் பலி கேட்பார்களோ என்று பயந்து, சுயநலம் கருதி சும்மா இருந்து விடாமல்; அவர்களுடைய பேராதிக்கப் போக்கை எதிர்த்து, “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை” என்று முழங்க வேண்டும்; விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்ற தமிழக விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிட நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும்.

என்ன செய்யப்போகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்பதை அறிந்து கொள்ளக் காத்திருக்கிறது தமிழகம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், அந்தமான் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடினார். அப்போது, அந்தந்த மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தி.மு.க.வினர் ஆற்றிவரும் உதவிப்பணிகள் குறித்து விசாரித்தறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த உரையாடலின் போது, ‘வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை திரும்ப தமிழகம் அழைத்துவர தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை’ என பிற மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள், மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

Next Story