ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி
ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், “கொரோனா தொற்று பரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். வரும் 25ம் தேதி (திங்கள் கிழமை) இஸ்லாமியர்களின் நோன்பு நிறைவு நாளான ரம்ஜான் ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த வேண்டியுள்ளது.
இந்த தொழுகையை பள்ளிவாசல் அல்லது திறந்த மைதானங்களில் நடத்துவது கடமை. எனவே, மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முறையாக சமூக விலகலை பின்பற்றி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட், மத ரீதியான வழிபாடுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story