சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி
நகர்புற பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4-வது கட்டமாக வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கடைகளைத் திறப்பது, தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், இந்த 4-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சலூன்கள், அழகு நிலையங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன்களை திறக்கலாம் . தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி இல்லை.
குளிர்சாதன வசதியை சலூன்கள், அழகு நிலையங்களில் பயன்படுத்தக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினியை அவ்வப்போது தெளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உள்ளே அனுமதிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.ஏற்கனவே, ஊரக பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story