கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு


கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
x
தினத்தந்தி 23 May 2020 3:15 PM GMT (Updated: 23 May 2020 3:15 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதார துறை சார்பில் இன்று வெளியான செய்தியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இன்று 5 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 98ல் இருந்து 103 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 948 பேர் 12 வயதிற்கு உட்பட்டவர்கள்.  13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 8,577.  பெண்களின் எண்ணிக்கை 4,704.  இவற்றில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இதேபோன்று 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எண்ணிக்கை 786 மற்றும் பெண்கள் எண்ணிக்கை 492 என 1,278 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,364ல் இருந்து 9,989 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் 0.66 சதவீதம் ஆகவும், குணம் அடைந்தோர் விகிதம் 48.29 சதவீதம் ஆகவும் உள்ளது.

Next Story