சிறப்பு ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்


சிறப்பு ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
x
தினத்தந்தி 1 Jun 2020 4:31 AM GMT (Updated: 1 Jun 2020 4:31 AM GMT)

இன்று முதல் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை

தெற்கு ரெயில்வே சார்பில் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்கள் மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன. இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

இந்தநிலையில் இந்த சிறப்பு ரெயில்களில் பயணிக்க ‘இ-பாஸ்’ கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரசு உத்தரவின்படி ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் ‘இ-பாஸ்’ பெற்றிருக்க வேண்டும்.

ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரெயில் மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ‘ஆன்-லைன்‘ மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து ‘இ-பாஸ்‘பெற்று இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

இன்று முதல் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ரெயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் பயணிகள், ரெயில் நிலையத்திற்கு வர வேண்டும். பயணிகள் அனைவரும் மருத்துவச் சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்படுவர். கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

பயணிகள் கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும். பயணச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். சென்று சேரும் ரெயில் நிலையத்திலும் அரசு வரையறுத்துள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நோய்த் தொற்றைத் தவிர்க்கப் பயணிகள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வரலாம்.

Next Story