கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது


கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 3 Jun 2020 12:15 AM GMT (Updated: 3 Jun 2020 12:44 AM GMT)

4 கட்ட ஊரடங்குக்கு பிறகும் கொரோனா தொற்று அடங்காமல் வேகமாக பரவிவருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 12 பேர் பலியானார்கள். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னை,

5-வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது புதிதாக நேற்று 1,091 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் கொரோனா கட்டுக்கு அடங்காமல் பரவி வருகிறது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 1,091 பேரில் 809 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 1,036 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 55 பேர் என ஒரே நாளில் மொத்தம் 1,091 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 586 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 644 ஆண்கள் மற்றும் 447 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 15 ஆயிரத்து 394 ஆண்களும், 9 ஆயிரத்து 179 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 13 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று 536 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 13 ஆயிரத்து 703 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் 7 ஆயிரத்து 176 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பெண்கள் உள்பட 13 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 9 ஆண்களும், செங்கல்பட்டை சேர்ந்த ஒரு ஆணும் ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, மேலும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 78 வயது ஆண் கொரோனா வைரசால் மட்டும் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணரலால் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் நேற்று 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் 1,091 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பட்டியலில் சென்னையில் 809 பேரும், செங்கல்பட்டில் 82 பேரும், தூத்துக்குடியில் 51 பேரும், திருவள்ளூரில் 43 பேரும், காஞ்சீபுரத்தில் 15 பேரும், திருவண்ணாமலையில் 14 பேரும், நெல்லையில் 12 பேரும், சேலத்தில் 9 பேரும், கன்னியாகுமரி, திருச்சியில் தலா 7 பேரும், தேனியில் 5 பேரும், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தலா 4 பேரும், விருதுநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் தலா 3 பேரும், திண்டுக்கல், ஈரோடு, திருவாரூர், தென்காசியில் தலா 2 பேரும், விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இடம்பெற்று உள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 1,378 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,351 முதியவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் சிறப்பு விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் இதுவரை 92 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 23 பேரும், ரெயில் மூலம் வந்த 247 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,321 பேரும் என மொத்தம் 1,683 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று 11 ஆயிரத்து 94 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் 5 லட்சத்து 14 ஆயிரத்து 433 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதில் 4 லட்சத்து 89 ஆயிரத்து 258 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை. 23 ஆயிரத்து 629 மாதிரிகள் 2-வது முறையாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 589 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story