திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்


திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்
x
தினத்தந்தி 5 Jun 2020 3:40 AM GMT (Updated: 5 Jun 2020 3:40 AM GMT)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும்,,சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2ம் தேதியன்று கொரோனா, மூச்சுத் திணறலுடன்  சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று  தெரிவித்துள்ளதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், 67% மட்டுமே இன்று தேவைப்படுகிறது. 

இவ்வாறு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story