செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்


செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 5 Jun 2020 7:12 AM GMT (Updated: 5 Jun 2020 7:12 AM GMT)

செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைதொடும். அப்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும்

சென்னை

தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி விட்டது.

தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் ஓரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 5 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டி உள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் 5- வது நாளாக தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,388 பேர் பாதிப்புபதிவாகி உள்ளது.

தண்டையார்பேட்டை- 2,261, தேனாம்பேட்டை - 2,136 கோடம்பாக்கம்- 2,123 திருவிக நகர் - 1,855, அண்ணாநகர்- 1660, அடையாறு- 1042, வளசரவாக்கம்- 9, திருவொற்றியூர்- 670, சோழிங்கநல்லூர்- 339, மணலி- 259, மாதவரம் - 490, அம்பத்தூர்- 289 பெருங்குடி- 334, ஆலந்தூர்- 289

சென்னையில் செப்டம்பர் மாத இறுதியில்தான் பாதிப்புகளும் இறப்புகளும் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தான் பாதிப்புகள் குறையும் என எம்.ஜி.ஆர். பல்கலைகழக ஆய்வு தகவல்கள் கூறுகின்றன

தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் அனைத்தும் சென்னையில் வழங்கப்படவில்லை. நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுப் போக்குவரத்து இயக்கப்படவில்லை. சென்னையில் செப்டம்பர் மாத இறுதியில்தான் பாதிப்புகளும் இறப்புகளும் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக ஆய்வில் சென்னையில் ஜூலை 15-ஆம் தேதி 1,05,244 பாதிப்புகளும் 1654 இறப்புகளும் ஏற்படக்கூடும் என  கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இது வரை ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இறப்புகள் குறித்து எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக ஆய்வில்   கணிக்கப்பட்டதைப் போலவே நடந்து உள்ளன. பல்கலைக்கழகம் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் அதன் கணிப்புகள் அரசாங்கத்தால் தீவிர கண்காணிப்பு மற்றும் தயார்நிலைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

ஆய்வில் சென்னையில் மே 25-ஆம் தேதி  11119 பாதிப்புகளும் 83 இறப்புகள் ஏற்படும் என கணிக்கபப்ட்டது. அன்று 11131 பாதிப்புகளும் 83 இறப்புகளும் பதிவாகி இருந்தன.

 மே 30ஆம் தேதி 14415 பாதிப்புகளும் 119 இறப்புகளும் நேரிடும் என கணிக்கப்பட்டது. அந்த தேதில் சென்னையில் 13980 பாதிப்புகள் மற்றும் 119 இறப்புகள் ஏற்பட்டன.

ஜூன் 1ஆம் தேதி 15991 பாதிப்புகள் மற்றும் 137 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது. அன்று 15770 பாதிப்புகளும் 138 இறப்புகளும் ஏற்பட்டன.

ஜூன் 2ஆம் தேதி 16842 பாதிப்புகள் ஏற்படும் என்றும் 146 இறப்புகள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டது. அன்று சென்னையில் 16585 பாதிப்புகள் மற்றும் 150 இறப்புகள் ஏற்பட்டன.

ஜூன் 3-ஆம் தேதி 17738 பாதிப்புகள் மற்றும் 156 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது. அந்த தேதியில் 17598 பாதிப்புகள் மற்றும் 153 இறப்புகள் ஏற்பட்டன. 

ஜூன் 4ஆம் தேதியில் சென்னையில் 18681 பாதிப்புகள் மற்றும் 166 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது. அந்த தேதியில் சென்னையில் 18693 பாதிப்புகள் மற்றும் 167 இறப்புகள் ஏற்பட்டன.

அடுத்த பத்து நாட்களில் ஜூன் 15-ஆம் தேதி பாதிப்புகள் 32977 மற்றும் 324 இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.ஜூன் 30-ஆம் தேதியில் இது இரு மடங்காகி 7,1024 பாதிப்புகள் மற்ற 748 இறப்புகள் சென்னையில் நேரிடலாம். இதே தேதியில் தமிழகத்தில் 1,32,242 பாதிப்புகளும் 769  இறப்புகளும் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி சென்னையில் 74714 பாதிப்புகள் மற்றும் 790 இறப்புகள் ஏற்படக்கூடும். ஜூலை 15-ல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து  150244 என பாதிப்புகளும் 1654 என இறப்புகளும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மூத்த விஞ்ஞானியும், தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் ஆர்.ராமகிருஷ்ணன் விஞ்ஞானிகள் தெய்வங்களும் இல்லை, இது யூக வேலையும் அல்ல. கடந்த இரண்டு மாதங்களாக அவர்களின் கணிப்புகள் உண்மையாக இருந்ததால், பல சமூக காரணிகள் இருப்பதால் வரும் மாதங்களில் அது இன்னும் தவறாக போகலாம் என்று நாம் கூற முடியாது. ஆனால் இவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அறிகுறிகள் என கூறினார்.

Next Story