கொரோனா பரவலை தடுக்க மதுரையிலும் முழு ஊரடங்கு - தமிழக அரசு உத்தரவு


கொரோனா பரவலை தடுக்க மதுரையிலும் முழு ஊரடங்கு - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 23 Jun 2020 12:00 AM GMT (Updated: 22 Jun 2020 8:54 PM GMT)

கொரோனா பரவலை தடுக்க மதுரை, சுற்றுப்புறங்களில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் 30-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுரை மாநகராட்சி பகுதி மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் அதிக மக்கள் தொகை இருப்பதாலும், அங்குள்ள பல மண்டலங்களில் வீடுகள் நெருக்கமாக இருந்து சராசரி குடியிருப்பு வசதி குறுகலாக இருப்பதாலும் கொரொனா தொற்று அதிகமாகி வருகிறது.

மேலும் மதுரை மாநகரத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊரக வட்டாரங்களில் தொற்று லேசாக அதிகரித்து வருகிறது. மேலும், மாவட்டங்களுக்குள் நடக்கும் மக்களின் போக்குவரத்தினாலும் தொற்று அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

எந்தெந்த இடங்கள்

எனவே தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுகிறது. அதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வழிவகை ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதுசம்பந்தமாக மண்டல குழுக்கள், மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகியவற்றின் ஊரக வட்டாரங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கருத்து கூறினர். இதன் மூலம் கொரோனா பரவும் சங்கிலியை உடைப்பதோடு, தொற்றை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்வது, தனிமைப்படுத்துவதை மேலாண்மை செய்வது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முடியும் என்றும் இதன் மூலம் தொற்றை குறைக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

7 நாட்களுக்கு...

முதல்-அமைச்சரும் மருத்துவ மற்றும் பொதுசுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, கொரோனா மேலும் பரவாமல் இருப்பதற்காக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி மற்றும் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகியவற்றின் ஊரக வட்டாரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது.

இதன் மூலம் நோயாளிகளை தனிமைப்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மேலாண்மை செய்வது ஆகிய பணிகளை இன்னும் திறம்படச் செய்ய வழிவகுக்கும்.

அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணியில் (24-ந் தேதி) இருந்து 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை 7 நாட்களுக்கு அந்தப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சில அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது.

ஞாயிறு தளர்வு இல்லை

27-ந் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து 29-ந் தேதி காலை 6 மணிவரை (28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முழுவதும்) எந்தவொரு தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பால் விநியோகம், மருத்துவமனை, அதற்கான வாகனங்கள், மருந்துக் கடை, மருத்துவ அவசரத்துக்கு தனியார் வாகனங்கள் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story