நாளை முதல் 2 நாள் பயணமாக கோவை, திருச்சிக்கு எடப்பாடி பழனிசாமி செல்கிறார்


நாளை முதல் 2 நாள் பயணமாக கோவை, திருச்சிக்கு எடப்பாடி பழனிசாமி செல்கிறார்
x
தினத்தந்தி 23 Jun 2020 10:15 PM GMT (Updated: 23 Jun 2020 8:56 PM GMT)

2 நாள் பயணமாக கோவை, திருச்சிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். அப்போது, கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம், திருச்சியில் முக்கொம்பு கதவணை கட்டும் பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறார்.

சென்னை, 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25-ந்தேதி (நாளை) காலை 10 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், கொரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும் அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும், அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் திட்டப் பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.

முக்கொம்பு கதவணை கட்டும் பணி

அதனைத் தொடர்ந்து, 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்யவும் உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story