‘கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்’ எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


‘கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்’ எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Jun 2020 10:45 PM GMT (Updated: 24 Jun 2020 8:56 PM GMT)

கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு, ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று மாற்றி, மாற்றி அறிவிக்கப்பட்டு இன்று (நேற்றுடன்) 90 நாட்கள் ஆகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே ஒரே வழி என்று நினைத்த மத்திய-மாநில அரசுகள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிதளவும் கை கொடுக்கவில்லை. ‘கொனோரா வென்றான்‘ என்ற பட்டத்துக்கு இப்போதே குதூகலத்துடன் தயாராகி விட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை பற்றி எதுவும் சொல்லவே வேண்டியதில்லை.

இந்த கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்த கொடூர சேவையாக பெட்ரோல், டீசலுக்கான வரியை ஏற்றி விலையையும் ஏற்றிக்கொண்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் வழங்குங்கள் என்று தொடக்கத்திலிருந்தே நான் கோரிக்கை வைத்து வருகிறேன்.

இரக்கமற்ற முதல்-அமைச்சருடைய இதயம் சற்றும் இறங்கி வரவில்லை. தடை செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் அரசு வழங்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். அப்போதுதான் அந்த பகுதி மக்கள் வெளியில் வராமல் இருப்பார்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். அதற்கும் இந்த அரசு ஏனோ செவி சாய்க்கவில்லை.

பொதுமுடக்கம் இருந்தால் தானே இந்த கோரிக்கைகள் வரும் என்று நினைத்த முதல்-அமைச்சர், ஊரடங்கை தளர்வுக்கு மேல் தளர்வு செய்து, அந்த சட்டத்தின் சாரத்தையே மண்ணில் கொட்டிவிட்டார். பேரிடர் காலத்தில் மக்களுக்கு செய்யவேண்டிய உதவிகளையும் செய்யவில்லை. தரவேண்டிய சலுகைகளையும் வழங்கவில்லை. கொரோனாவையும் தடுக்கவில்லை. அதன் பரவலையும் கட்டுப்படுத்தவில்லை. மரணம் அடைகின்றவர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகமாகிக்கொண்டேபோகிறது. பெட்ரோல், டீசல் விலையையும் நாளுக்கு நாள் அதிகரிப்பேன். மின்கட்டணத்தையும் செலுத்த கட்டாயப்படுத்துவேன் என்று மக்கள் மீது நிதிநெருக்கடி தாக்குதலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்றால், அவருக்கு உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில், அறிஞர் அண்ணா குறிப்பிட்டதைப்போல ஒரு பள்ளம் இருக்கிறதா?

தமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயை வீடு விடாக சென்று தரவேண்டும் என்று அரசு சொல்லியிருக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் ரேஷன் கடைகளுக்கு மக்களை வரவழைத்து கொடுத்துள்ளார்கள். ஒரு தெருவுக்கு சென்று பொதுவான இடத்தில் நின்று கொண்டு, மக்களை அங்கு வரவழைத்துக் கொடுத்துள்ளார்கள். இதனால் மக்கள் கூட்டமாக கூடுவதும், தனிமனித இடைவெளியில்லாமல் போனதும், இதன் மூலமாகவும் கொரோனா பரவலும் நடக்கிறது. அரசாங்கம் ஓர் உத்தரவு போடுகிறது என்றால், அந்த உத்தரவை அரசு அதிகாரிகளே மதிக்கவில்லை என்றால், தட்டிக்கேட்க வேண்டியது அரசாங்கம் தானே? அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்?

சென்னையில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் ஊர்களை நோக்கி பயணப்படுவதற்கு கொரோனா பீதி மட்டுமே காரணமல்ல. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் எதையும் செய்ய முன்வரவில்லை. அநியாயமாக கைவிட்டுவிட்டதே என்ற சோகத்திலும், விரக்தியிலும் தான் புறப்பட்டுச்செல்கிறார்கள். வாழ்க்கை விரட்டுகிறது. அதோடு சேர்ந்து அரசாங்கமும் மேலும் விரட்டுகிறது என்றால் மக்கள் என்ன செய்வார்கள்?

சென்னையில் அதிகம் பரவி வந்த தொற்று, கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு வழியற்ற முதல்-அமைச்சர், கோவைக்கும், திருச்சிக்கும் பயணமாகிறார். குடிமராமத்து பணிகளை பார்வையிடவும், இதர கட்டுமானப்பணிகளை பார்வையிடவும் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதயம் மரத்து, இரக்கமற்ற தன்மை தலைக்கேறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் எதேச்சதிகாரம் பெருகி வருவதையே இது காட்டுகிறது.

தமிழக மக்கள் இப்போது இருப்பது மருத்துவ நிபுணர்கள் சொல்லும் ‘கோல்டன் பீரியட்‘ ஆகும். இதில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். உங்களது அலட்சியத்தால், அக்கறை இன்மையால், தன்னிச்சையான அணுகுமுறையால், இந்த 90 நாட்களையும் வீணடித்தது போல, இனியும் வீணடித்து, மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள். கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள். வாழ்வியல் பேரிடரில் இருந்து மக்களை மீட்டுத்தாருங்கள். காலம் உங்களுக்கு இட்டிருக்கும் கடமையிலிருந்து எப்படியாவது தப்பித்து நழுவி விடலாம் என்று கற்பனையிலும் நினைக்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story