தமிழக அரசின்ரூ.2 ஆயிரம் கோடி பாரத்நெட் டெண்டர் ரத்து-மத்திய அரசு உத்தரவு


தமிழக அரசின்ரூ.2 ஆயிரம் கோடி பாரத்நெட் டெண்டர் ரத்து-மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 27 Jun 2020 11:00 PM GMT (Updated: 27 Jun 2020 9:22 PM GMT)

முறைகேடு காரணமாக தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் கோடி பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, 

தமிழகம் முழுவதும் 12,542 கிராமங்களுக்கு அதிவேச இணையதள வசதியை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசின் நிதியுதவியுடன் (பாரத்நெட்) கூடிய திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்துகிறது. ரூ.1950 கோடி மதிப்புள்ள இந்த பாரத்நெட் திட்டத்துக்கு டெண்டர் வெளியிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக அரசின் உயர்மட்டத்தில் உள்ள சிலருக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு இந்த டெண்டர் கிடைப்பதற்காக பாரத்நெட் டெண்டரில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக முதல்- அமைச்சர், தலைமை செயலாளர், மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் மற்றும் மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை உள்ளிட்டோருக்கு அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.

அறப்போர் இயக்கத்தின் இந்த புகாரை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை கடந்த 23-ந்தேதி காணொலி காட்சி மூலம் விசாரித்தது.

இதைத்தொடர்ந்து பாரத்நெட் டெண்டரை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேசனுக்கு (டாபிநெட்) தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

அதில், இந்த டெண்டரில் ஏல நிபந்தனைகள் கட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் பாரபட்சமானவையாக இருப்பதால் கட்டுப்பாடுகள் இல்லாத புதிய டெண்டரை டாபிநெட் நிறுவனம் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான சரிப்படுத்தும் நடவடிக்கையை தொலைத்தொடர்புத்துறை அதிகாரி டாபிநெட் நிறுவனத்துக்கு வழிகாட்ட வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Next Story