சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த சம்பவம்; நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்


சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த சம்பவம்; நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
x

சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின்பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று இரவு ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீசார் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 22ந்தேதி இரவு பென்னிக்சுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரத்தில் இறந்தார். ஜெயராஜூம் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் பலியானார்.

அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன. மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த 24ந்தேதி இரவு 8 மணியளவில் பிரேத பரிசோதனை தொடங்கியது. முதலில் பென்னிக்ஸ் உடலும், அதன்பிறகு ஜெயராஜ் உடலும் அடுத்தடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இரவு 11.30 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்தது. அதுவரை ஜெயராஜ் உறவினர்கள், அந்த ஊரை சேர்ந்தவர்கள் காத்து இருந்தனர். பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றனர்.

இதையடுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் கடந்த 25ந்தேதி, 2வது நாளாக விசாரணை நடத்தினார். காலையில் ஜெயராஜ் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா மற்றும் உறவினர்கள் வந்தனர். அவர்களுடன் வக்கீல்களும் வந்தனர். அவர்களிடம் காலையில் தொடங்கிய விசாரணை மாலை வரை நடந்தது.  பின்னர் அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார்.  அவர்களின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது, ஆழ்ந்த அனுதாபத்தை கூறியுள்ளார்.  இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் ரியாஸ் அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.

Next Story