சாத்தான்குளம் சம்பவத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் - கவிஞர் வைரமுத்து உருக்கமான வேண்டுகோள்


சாத்தான்குளம் சம்பவத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் - கவிஞர் வைரமுத்து உருக்கமான வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Jun 2020 8:57 PM GMT (Updated: 28 Jun 2020 8:57 PM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து உருக்கமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை,

சாத்தான்குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள் மற்றும் தந்தை-மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால்தான் இது தமிழகத்துயரம் என்பதைத்தாண்டி இந்தியத்துயரமாகிவிட்டது. பெருமைக்கும், பேருழைப்புக்கும் பெயர்பெற்ற தமிழ்நாட்டு காவல்துறையை சிறுமைக்குள்ளாக்கிவிட்டது சிந்திமுடித்த சிவப்புரத்தம்.

சிறைக்கோட்டத்துக்குள் எத்துணையோ தனிமரணங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால், ஒருகுடும்பத்தின் தகப்பனும், மகனும் ஒரேநேரத்தில் இறந்துபோனசம்பவம் இதயத்தின் மத்தியில் இடிவிழச்செய்துவிட்டது. குற்றவாளிகள் வேறு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேறு. ஒரு விசாரணைக்கைதியைக்கூட குற்றவாளி என்று அழைப்பது பிழை; குற்றம்சாட்டப்பட்டவர் என்பதே சரி. ஒருவன் குற்றவாளி என்று தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பேதவிர, காவல்துறையின் அதிகாரமன்று.

காவல்துறையின் அதிகாரம் என்பது உண்மைக்குள் செலுத்தப்படுவதே தவிர, உடலுக்குள் செலுத்தப்படுவது அல்ல. 1928-ல் விடுதலைப்போராட்டவீரர் லாலா லஜபதிராய், ஜேம்ஸ்காட் என்ற காவல்துறை அதிகாரியின் இடிகள்போன்ற அடிகள் தாங்கித்தான் இறந்துபோனார் என்பது வரலாறு. ஆனால், 2020-ல் பச்சைத்தமிழர்கள் இருவர் சிறைக்கோட்டத்தில் செத்துப்போனார்கள் என்றால் நாம் பிறந்ததும், வாழ்வதும் பிரிட்டிஷ் இந்தியாவிலா? சுதந்திர இந்தியாவிலா?.

விதைகளை மறைக்கலாம்; விருட்சங்களை மறைக்கமுடியாது. உண்மை இப்போது விருட்சமாகிவிட்டது. மருத்துவஅறிக்கைகளும், நீதித்துறை ஆவணங்களும் தகப்பன் உடம்பிலும், மகன் உடம்பிலும் யுத்தக்காயங்கள் போன்ற ரத்தக்காயங்கள் உறுதிபடுத்துகின்றன. அவர்கள் என்ன சமூகவிரோதிகளா?, தீவிரவாதிகளா?, தங்கள் செல்போன் கடையில் இருந்து உலகநாடுகளுக்கு உளவு சொன்னவர்களா? அல்லது சீனா வெற்றிபெற வேண்டும் என்று செய்வினை செய்தவர்களா? நேர்மையாக பிழைக்க வேண்டுமென்று கடைவிரித்தவர்கள்.

ஊடரங்கு விதிகளை சிலநேரங்களில் மீறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊரடங்கை மீறியதற்காக உயிரடங்குசெய்வதா? செய்திகேட்ட அன்று என்னால் இரவு உணவுஅருந்த முடியவில்லை. இலக்கிய மனதுதான் வலிக்கிறது என்றுபார்த்தால், எல்லா மனங்களும் அப்படியே வலித்துத்துடிக்கின்றன.

மெய்யான காவலர்கள் மேன்மைக்குரியவர்கள். கொரோனாவுக்காக உழைத்தவர்களுக்கு நாம் கும்பிட்டு நன்றிசொன்னோம். கொடுமையைக்காணும்போது கும்பிடமுடியுமா? குமுறி அழுகிறதே மனது. காவல்துறைக்கென்று வகுக்கப்பட்ட விதிகளை மறந்துவிட்டோம். 1872-ல் இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச்சட்டம் விசாரணைக்கைதிகளை துன்புறுத்தக்கூடாது; அவர்கள் மீது வசைமொழி வீசக்கூடாது என்று வகைப்படுத்துகிறது.

ஆனால், விசாரணைக்கைதிகளின் உடல்கள் சில காவலர்களுக்கு விளையாட்டு மைதானங்களாகி விடுகின்றன. 2 காவலர்களுக்கு மத்தியில் ஒருகைதி கால்பந்தாகிவிடுகிறான். காவலன் என்பவன் எல்லா உயிர்களுக்கும் கண்களாகவும், உயிராகவும் இருந்து காவல் காப்பவன் என்று பதிற்றுப்பத்து இலக்கியத்தில் பழைய நீதிபடைத்தவன் தமிழன். ஆனால், மக்களின் உயிரையும், கண்களையும் பறிப்பவனா காவலன்?

பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதிவேண்டும். இனி இதுபோல் பரிதவிக்கவிடமாட்டோம் என்ற உறுதிமொழிவேண்டும். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புகளை சொல்லிக் கொடுக்கவேண்டும். அந்த அதிகாரம் கட்டுப்பாட்டில் செலுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கவும்வேண்டும். “காக்கை குருவி எங்கள் சாதி“ என்று கவிதை படித்த இனத்தில் இந்துவும்-கிறிஸ்தவனும்-இஸ்லாமியனும் எங்கள் சாதியாக இருக்கமாட்டானா?, இருக்கவேண்டும். அவனுக்கு இறப்பு வேண்டாம்; இருப்பு வேண்டும். சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story