சாத்தான்குளத்தில் விசாரணைக்கு இடையூறு மாஜிஸ்திரேட்டு இ-மெயிலில் புகார்: 3 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்


சாத்தான்குளத்தில் விசாரணைக்கு இடையூறு மாஜிஸ்திரேட்டு இ-மெயிலில் புகார்: 3 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்
x
தினத்தந்தி 29 Jun 2020 11:45 PM GMT (Updated: 29 Jun 2020 9:12 PM GMT)

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்ட மாஜிஸ்திரேட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் இ-மெயிலில் அனுப்பிய புகாரை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு உள்பட 3 போலீசாரை அதிரடியாக மதுரை ஐகோர்ட்டு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் அவர்கள் 3 பேர் மீதும் கிரிமினல் அவமதிப்பு வழக்கும் பதிவு செய்தது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் குறித்து, மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தனர்.

மேலும், வழக்கு விசாரணைக்காக கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு நேரடியாக சாத்தான்குளம் செல்ல வேண்டும். அவர் அங்கு தங்கியிருந்து, போலீஸ் நிலையத்திலும், இறந்தவர்களின் உறவினர்களிடமும் நேரடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களை புகைப்படம் எடுத்தும், வீடியோ பதிவுகளை செய்தும் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த 26-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரைக்க இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து மதுரை ஐகோர்ட்டில் சாத்தான்குளம் சம்பவத்தை விசாரிக்கும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு, வீடியோ கான்பரன்சிங்கில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜரானார். சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரைக்க அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

அதற்கு நீதிபதிகள், “இது மாநில அரசின் கொள்கை முடிவு. இதில் நாங்கள் தலையிட முடியாது” என்றனர்.

மேலும், இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும்பட்சத்தில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, வழக்கு விசாரணை அறிக்கை, சாட்சியங்களின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றை போலீசார், மாவட்ட நீதிபதி, அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் அனைவரும், தங்களின் அறிக்கை ஆவணங்களின் அசல்களை சி.பி.ஐ. போலீசாரிடம் வழங்கலாம். அவற்றின் நகல்களை மதுரை ஐகோர்ட்டு பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே சாத்தான்குளத்தில் தங்கி, இந்த வழக்கு விசாரணைக்கான சாட்சியங்களின் சேகரிப்பில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் ஈடுபட்டு உள்ளார். அப்போது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அவர் சில ஆவணங்களை தருமாறு அங்குள்ள போலீசாரிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு போலீசார் தரமறுத்ததாகவும், அதுமட்டுமல்லாமல் மாஜிஸ்திரேட்டுவின் விசாரணையை தடுக்கும் வகையில் பேசியதாகவும், கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு உடனடியாக மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு இ-மெயில் மூலம் புகார் தெரிவித்தார். இந்த புகார் பற்றி நிர்வாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக நீதிபதிகளின் உத்தரவின் பேரில், அந்த புகார் கிரிமினல் அவமதிப்பு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த கிரிமினல் அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் உடனடியாக நேற்று விசாரணைக்கு எடுத்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு வருமாறு:-

சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த வழக்கு விசாரணைக்காக அங்கேயே தங்கியிருந்து ஆவணங்களை திரட்டும்படி கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டோம். அவர் அங்குள்ள போலீஸ்நிலையத்தில் விசாரித்த போது, அவரது நடவடிக்கைக்கு தடையை ஏற்படுத்தும் விதமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாஜிஸ்திரேட்டுவின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்துள்ளனர்.

மேலும், வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை கேட்டபோது, ஒரு போலீஸ்காரர் “உன்னால ஒன்னும் முடியாது” என்று கூறியதாக மாஜிஸ்திரேட்டு புகாரில் தெரிவித்து உள்ளார்.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேரையும் பணியிட மாற்றம் செய்தால் மட்டுமே இந்த வழக்கு விசாரணை எந்தவித தடையும் இல்லாமல் நடக்கும்.

எனவே அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் 3 பேரும் 30-ந்தேதி (அதாவது இன்று) காலை 10.30 மணியளவில் எங்கள் முன்பு ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையே சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story