சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு


சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x

தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2,325 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளது. 38,889 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை தடுக்கும் விதமாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு விலையில்லாமல் 30.6.2020 வரை வழங்கப்பட்டு வந்தது. 

சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு 19.6.2020 முதல் 30.6.2020 வரை அமல்படுத்தப்பட்டதால், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டிருந்தேன். 

மேற்கண்ட பகுதிகளில் 5.7.2020 வரை தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இக்காலக்கட்டத்தில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய சமையல் கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான அளவு உணவு சமையல் செய்து, இந்த உணவை, விலையில்லாமல், தேவைப்படும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன். இந்த நடைமுறை நாளை (1.7.2020) முதல் 5.7.2020 வரை செயல்பாட்டில் இருக்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story