சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்


சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷுக்கு  15 நாள் நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 2 July 2020 2:06 AM GMT (Updated: 2 July 2020 2:06 AM GMT)

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ ரகுகணேஷ் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து,  நேற்று இரவு எஸ்.ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். எஸ்.ஐ ரகுகணேஷ் மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ரகுகணேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  ஜூலை 16 ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவையடுத்து தூத்துக்குடி பேரூரணி கிளைச்சிறையில் ரகுகணேஷ் அடைக்கப்பட்டுள்ளார்.


Next Story