புதுக்கோட்டை சிறுமி கொலை : வெறி நாய் போல் நடந்து கொண்ட கொடூரன்... பிரபலங்கள் கண்டனம்


புதுக்கோட்டை சிறுமி கொலை : வெறி நாய் போல் நடந்து கொண்ட கொடூரன்... பிரபலங்கள் கண்டனம்
x
தினத்தந்தி 3 July 2020 6:15 AM GMT (Updated: 3 July 2020 6:15 AM GMT)

வெறி நாய்போல் சிறுமியை கடித்து குதறிய கொடூரன். புதுக்கோட்டை சிறுமி கொலையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் அருகே மன நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கும் பெண் ஒருவரின் 7 வயது மகள் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 29ந்தேதி அந்த சிறுமி வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மாயமானார்.

சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுமி கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 1ந்தேதி மாலையில் உடல் முழுவதும் காயங்களுடன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அந்த சிறுமி அங்குள்ள ஊரணி ஒன்றில் ஆடைகளின்றி சடலமாக கிடந்தார்.

சடலத்தை கைப்பற்றி விசாரித்த காவல் துறையினர் சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி உறவினர்கள் போராடிவந்த நிலையில் வியாழக்கிழமை மாலை சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பூ வியாபாரி ஒருவனை பிடித்து விசாரித்த போது சிறுமி கொலைக்கான மர்மம் விலகியது.

சிறுமியின் தந்தை கூலித்தொழிலாளி என்பதால் தினமும் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் மன நிலை பாதிக்கப்பட்ட தாய் மட்டும் உள்ள நிலையில் சிறுமியை கவனித்துக் கொள்ள பொறுப்பான ஆட்கள் இல்லை என்று கூறப்படுகின்றது.

இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பூவியாபாரி ராஜா என்பவர் அந்த சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பழகியுள்ளான். சம்பவத்தன்று சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட  உடல் முழுவதும் வெறிபிடித்த நாய் போல கடித்து வைத்துள்ளான்.

வலிதாங்காமல் அலறித்துடித்த சிறுமியை மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து சடலத்தை ஊரணியில் உள்ள செடிகளின் மறைவில் போட்டு மூடிவிட்டு தப்பியுள்ளான். இரு தினங்களாக சிறுமி யை உறவினர்கள் தேடி உள்ளனர் அவர்களுடன் சேர்ந்து இவனும் தேடுவது போல நடித்துள்ளான்.

பாலியல் கொடூரன் ராஜா மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே சிறுமியிடம் சிறிய அளவில் சேட்டைகள் செய்த போது இவனை ஒருவர் கூட எச்சரிக்காததால், செல்போனில் ஆபாச படங்களை பார்த்து இந்த கொடூர செயலுக்கு உந்தப்பட்டதாக தெரிவித்துள்ளான் கொடூரன் ராஜா என்கின்றனர் காவல்துறையினர்.

இதற்க்கிடையே இந்த சிறுமியை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

இதனிடையே, கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்ட சீர் உதவித் தொகையாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்தபடி 5 லட்சம் ரூபாயுடன் சேர்த்து இந்த தொகையும்,  வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி இன்னொரு குழந்தை பாதிக்காமல் இருக்க தக்க பாதுகாப்பை ஏற்படுத்த நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்! சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து! தெரிவித்து உள்ளார். 

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? மற்றும் ஒரு குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட உலகில் தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம் என்றால் நாம் அனைவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சாக தகுதியுடையவர்கள் தான்... அது தான் மனிதர்களாகிய நமக்கு கடவுளின் பதிலாகவும் இருக்கும்.. நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்....என பதிவிட்டுள்ளார்.

Next Story