தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 6 July 2020 10:22 AM GMT (Updated: 6 July 2020 10:22 AM GMT)

ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தமிழக தலைநகர் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளன.

சென்னையில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இதனால், பொதுமக்கள் வழக்கம்போல் அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்கள் அணிவகுத்தபடி செல்கின்றன.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.  அவர் கூறும்பொழுது, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை 1,000 படுக்கைகளுடன் சிறப்பாக செயல்படுகிறது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியை 2 ஆயிரம் ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  நோயாளிகள் வசதிக்காக ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஊர்திகள் இன்று துவக்கி வைக்கப்படுகின்றன.  சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

Next Story