எண்ணெய்க்குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்காக கருத்துக்கேட்பு கூட்டங்களை ரத்து செய்யவேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


எண்ணெய்க்குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்காக கருத்துக்கேட்பு கூட்டங்களை ரத்து செய்யவேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 July 2020 9:45 PM GMT (Updated: 6 July 2020 8:52 PM GMT)

எண்ணெய்க்குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்காக விளைநிலங்களை கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள கருத்துக்கேட்பு கூட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஊழல் செய்வதை முன்னுரிமை வேலையாக கொண்டு, ஜனநாயகத்துக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், விவசாயிகளின் நிலங்களை பறித்திடும் தீர்மானமான எண்ணத்துடன், கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்துவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகின்ற காலத்தில் குறிப்பாக, முதல்- அமைச்சரின் மாவட்டமான சேலத்தில் மட்டும் 1,247 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, அங்கு 5 பேர் உயிரிழந்தும் உள்ளார்கள்.

கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் தன் சொந்த மாவட்டத்திலேயே முனைப்பு காட்டாமல், பாரத் பெட்ரோலியத்தின் இருகூர்தேவன கொந்தி ஐ.டி.பி.எல். திட்டங்களுக்கு விளைநிலங்களை கைப்பற்ற சேலத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது, விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுந்துயரமாகும். ஏற்கனவே எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள பசுமை நிறைந்த பகுதிகளை வெட்டி ஒழித்து, காவல்துறையை வைத்து விவசாயிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட முதல்-அமைச்சர் இப்போது இந்த எண்ணெய்க்குழாய் பதிக்கும் திட்டத்திற்காக நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நிலங்களை எடுக்க கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்துவது மனித நேயமற்றது.

கண்டனம்

அ.தி.மு.க. அரசுக்கு மனித உயிர்களோ, விவசாயிகளின் வாழ்வாதாரமோ முக்கியமல்ல. மத்திய அரசு கை காட்டும் இடத்தில் கைகட்டி வாய் பொத்தி நின்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேளாண் நிலங்களை பறித்துக்கொடுப்பது மட்டுமே முக்கியம் என்ற நோக்கில் செயல்படுவது வேதனைக்குரியது.

விவசாயிகளுக்கு இடி மேல் பேரிடி போல் கடன் தவணையை கேட்டு மிரட்டும் செயலும் அ.தி.மு.க. ஆட்சியில் தொடருகிறது. வங்கிக்கடன் தவணையை திருப்பிச்செலுத்தவேண்டும் என்று ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மானூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாமணி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொரோனா காலத்தில் வங்கிக்கடன் தவணைகளை செலுத்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நாட்டு மக்கள் முன்பும், சுப்ரீம்கோர்ட்டிலும் மாறி, மாறி அறிவித்து வருகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மீறி வங்கி தவணையைச்செலுத்தவேண்டும் என்று விவசாயிகளை வங்கிகள் தான்தோன்றித்தனமாக மிரட்டுகின்றன. அறிவிப்பு ஒன்றும், அணுகுமுறை வேறுமாக அராஜகத்தை அரங்கேற்றும் வங்கிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தலையிட்டு திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

ரத்து செய்யவேண்டும்

ஆகவே பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க்குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களை கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டங்களை ரத்து செய்யவேண்டும் எனவும், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு எதிராக வங்கி கடன்களின் தவணைத் தொகையை திருப்பிச்செலுத்த மிரட்டி, விவசாயி ராஜாமணியின் தற்கொலைக்குக் காரணமான வங்கி அதிகாரிகள் மற்றும் அதன் கடன் வசூல் முகவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவுசெய்து உடனடியாக அவர் களை கைது செய்யவேண்டும்.

ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவினை மீறி கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் லைசென்சை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story