அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி


அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி
x
தினத்தந்தி 8 July 2020 11:15 PM GMT (Updated: 8 July 2020 9:28 PM GMT)

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது. புதிதாக 3,756 பேர் பாதிக்கப்பட்டனர். 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலியாகினர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 ஆயிரத்து 51 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் சிகிச்சை முடிந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 43 பேரும், தனியார் மருத்துவமனையில் 21 பேர் என 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் 23 வயது இளம்பெண் ஒருவரும் அடங்குவார். இதுவரைவில் கொரோனாவுக்கு 1,700 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்றைய உயிரிழப்பு பட்டியலில் சென்னையில் 26 பேரும், மதுரையில் 9 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், ராணிப்பேட்டையில் 5 பேரும், தேனியில் 4 பேரும், சிவகங்கை, காஞ்சீபுரம், செங்கல்பட்டில் தலா இருவரும், கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சியில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 34 ஆயிரத்து 962 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் தமிழகத்தில் 3 ஆயிரத்து 693 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 28 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த 35 பேர் என 3 ஆயிரத்து 756 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. எனவே கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 87 ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வயதுக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 63 குழந்தைகளும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 1,01,452 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 14 ஆயிரத்து 835 முதியவர்களும் அடங்குவர்.

தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களில் புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்படி சென்னையில் 1,261 பேரும், மதுரையில் 379 பேரும், திருவள்ளூரில் 300 பேரும், செங்கல்பட்டில் 273 பேரும், வேலூரில் 160 பேரும், தூத்துக்குடியில் 141 பேரும், காஞ்சீபுரத்தில் 133 பேரும், கன்னியாகுமரியில் 115 பேரும், விழுப்புரத்தில் 106 பேரும், கோவையில் 87 பேரும், தேனியில் 75 பேரும், கடலூரில் 71 பேரும், விருதுநகரில் 70 பேரும், சேலத்தில் 68 பேரும், ராமநாதபுரத்தில் 65 பேரும், திருவண்ணாமலையில் 55 பேரும், திருவாரூரில் 38 பேரும், சிவகங்கையில் 34 பேரும், தர்மபுரியில் 32 பேரும், புதுக்கோட்டையில் 31 பேரும், தென்காசியில் 27 பேரும், திருப்பூரில் 26 பேரும், திருச்சியில் 21 பேரும், நாகப்பட்டினத்தில் 19 பேரும், ராணிப்பேட்டையில் 16 பேரும், தஞ்சாவூரில் 15 பேரும், கிருஷ்ணகிரியில் 14 பேரும், கள்ளக்குறிச்சியில் 13 பேரும், அரியலூர், நாமக்கலில் தலா 12 பேரும், திண்டுக்கல், ஈரோடு, நீலகரி, திருப்பத்தூரில் தலா 10 பேரும், கரூரில் 7 பேரும், நெல்லையில் 6 பேரும், பெரம்பலூரில் 3 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 476 பேரும், வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 379 பேரும், ரெயில் மூலம் வந்த 421 பேரும், சாலை மார்க்கமாக வந்த 2 ஆயிரத்து 723 பேரும், கடல் மார்கமாக வந்த 31 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அரசு மருத்துவமனை மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நேற்று அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது 52 அரசு மற்றும் 46 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 98 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story