ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!


ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!
x
தினத்தந்தி 9 July 2020 8:13 AM GMT (Updated: 9 July 2020 8:13 AM GMT)

ஓபிசி பிரிவினருக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை, மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் ப்பதாவது:-

மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நடக்கும் நியமனங்களில் ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அளிக்கிறது. ஆனாலும் ஓ.பி.சி. பிரிவில் கிரிமிலேயர் வகைக்கு உட்பட்டவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தாது.

ஓ.பி.சி.யில் கிரிமிலேயர் பிரிவுக்கு வராதவர்கள் என்பதை கணிக்க 6 தகுதிகள் கணக்கிடப்படுகின்றன. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதற்கான அளவுகோலில் ஒன்று, வருமான வரம்பாகும்.

அந்தப் பிரிவில் வருபவரின் வருமான வரம்பு, ஆண்டொன்றுக்கு ரூ.1 லட்சம் என்று 1993-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து, வருமான வரம்பு ரூ.8 லட்சமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவினருக்கான தகுதியை நிர்ணயிப்பதில், சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை உட்படுத்தி, அதை திருத்துவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இடஒதுக்கீடும், நலத் திட்டங்களைப் பெறும் கிரிமிலேயர் பிரிவினர் யார் என்பதை முடிவு செய்யும்போது, சம்பளமும், விவசாய வருமானமும் அவர்களின் வருவாயில் தற்போது சேர்க்கப்படுவதில்லை. இந்த இரண்டையும் பெற்றவர்களின்ஒட்டுமொத்த வருவாயுடன் சேர்த்து கணக்கிட்டால், பல தகுதியுள்ள ஓ.பி.சி.யினரை மத்திய அரசின் நலத் திட்டங்கள் மற்றும் அரசுப் பணிகளை பெற முடியாமல் செய்துவிடும்.ள

எனவே கிரிமிலேயர் பிரிவினரை முடிவு செய்வதில் சம்பள வருவாய் மற்றும் விவசாய வருவாயை சேர்க்காமல், தற்போதுள்ள கொள்கையே நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் தமிழக அரசை மாதிரியாக மத்திய அரசு கொள்ள வேண்டும். இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து ஓ.பி.சி. பிரிவினரும் சம வாய்ப்பைப் பெறுவதோடு, முழு சமூகநீதியை அளிக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story