எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 14-ந்தேதி (நாளை மறுதினம்) நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், தொற்று பரவல் சவாலாகவே விளங்குகிறது. தற்போது சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினமும் உயிர் பலி ஏற்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 31-ந் தேதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் தொடர்ந்து விலையில்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் வருகிற 14-ந் தேதியன்று (செவ்வாய்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் அன்றைய தினம் மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
இதில், கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story