தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டியது


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 15 July 2020 10:30 PM GMT (Updated: 15 July 2020 8:02 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டியது. புதிதாக 4,496 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 5 ஆயிரம் குணம் அடைந்தனர். 68 பேர் உயிரிழந்தனர்.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு அரசு மருத் துவமனையில் 48 பேரும், தனியார் மருத்துவமனையில் 20 பேரும் என 68 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 23 பேரும், மதுரை, திண்டுக்கலில் தலா 5 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, வேலூரில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, விருதுநகர், சிவகங்கையில் தலா 3 பேரும், காஞ்சீபுரம், தேனி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா இருவரும், திருவண்ணாமலை, திருவள்ளூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், ஈரோடு, கோவையில் தலா ஒருவரும் அடங்குவர்.

எனவே கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 39 ஆயிரத்து 715 பேரின் தொண்டை சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 16 லட்சத்து 65 ஆயிரத்து 273 பேருக்கு தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

5 ஆயிரம் பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனாவில் இருந்து 5 ஆயிரம் பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சையில் 47 ஆயிரத்து 340 பேர் உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 622 பேரும், வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 422 பேரும், ரெயில் மூலம் வந்த 422 பேரும், சாலை மார்க்கமாக வந்த 2 ஆயிரத்து 994 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story