ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்: பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்: பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 July 2020 8:33 AM GMT (Updated: 16 July 2020 8:33 AM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி கொடியேற்ற நடைபெற்றது இதனால் பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோவில் போற்றப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார் பாடிய கோயில், பெரியகுளம், பெரிய பெருமாள் என்று பல பெருமைகளைக் கொண்டது.

இத்தகைய பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 

ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி வரும் 24 ஆம் தேதி ஆண்டாள் கோவிலில் தங்க தேர் இழுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விழாவில் கோயில் வளாகத்திற்குள்ளேயே தங்கத் தேரை இழுக்க தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார். பக்தர்கள் இன்றி 9 நாட்கள் திருவிழாவை அர்ச்சகர் மட்டும் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தேரோட்டக் காட்சிகள் யூ - டியூப் வலைதளத்தில் வெளியிடப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தேரோட்டத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டும் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள் .9 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து வந்து ஆண்டாளை தரிசனம் செய்வார்கள்.

கொடியற்றத்தை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கொடிபட்டம் மாட வீதிகளில் மேல தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு  செல்லப்பட்டது.

பின்னர் கொடி பட்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெற்றது.கொடியற்றத்தை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்துடன் காட்சி அளித்தனர். பின்னர் கொடியை அர்ச்சகர் வாசுதேவன் ஏற்றினார்.

விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் பக்தர்கள் கூட்டம் கூடியதை அடுத்து கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கிய செயல் அலுவலர். பக்தர்கள் முன்டியடித்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story