குடியாத்தம் நகராட்சியில் இன்று அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு ‘திடீர்’ ரத்து - கலெக்டர் அறிவிப்பு


குடியாத்தம் நகராட்சியில் இன்று அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு ‘திடீர்’ ரத்து - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 July 2020 4:12 AM GMT (Updated: 24 July 2020 4:12 AM GMT)

குடியாத்தம் நகராட்சி பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை 8 நாட்கள் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட முழுஊரடங்கு திடீரென ரத்து செய்யப்படுகிறது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர், 

குடியாத்தம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகரித்து வந்தது. தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குடியாத்தம் நகராட்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் நேற்று தரணம்பேட்டை பஜாரில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வாங்க குவிந்தனர். இதனால் குடியாத்தம் நகரில் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் இன்று முதல் 8 நாட்கள் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு திடீரென ரத்து செய்யப்படுவதாக நேற்று இரவு கலெக்டர் அறிவித்தார்.

குடியாத்தம் நகரில் கடந்த 2 நாட்களாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதாலும், குடியாத்தம் நகர பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது அவசியமில்லை என்பதாலும் முழு ஊரடங்கு திடீரென ரத்து செய்யப்பட்டது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story