மதுரையில் பயங்கரம்: தாய் கண் எதிரே 2 மகன்கள் வெட்டிக்கொலை: 10 பேர் கும்பல் வெறிச்செயல்


மதுரையில் பயங்கரம்: தாய் கண் எதிரே 2 மகன்கள் வெட்டிக்கொலை: 10 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 26 July 2020 8:00 PM GMT (Updated: 26 July 2020 7:31 PM GMT)

மதுரையில் முன் விரோதம் காரணமாக தாய் கண் எதிரே 2 மகன்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை, 

மதுரை எல்லீஸ்நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையத்தேவர். இவரது மகன்கள் முருகன் (வயது 45), வெள்ளிக்கண்ணு செந்தில் (40). பிரபல ரவுடிகளான இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இருவரின் மனைவிகளும் அவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

நேற்று மாலை திடீர்நகர் பகுதியில் உறவினர் ஒருவர் இறப்புக்கு சென்று விட்டு அண்ணன், தம்பி இருவரும் வீட்டிற்கு நடந்து வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் முன்பு குளித்து விட்டு வெளியே அமர்ந்திருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது.

திடீரென்று அந்த கும்பல் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதனை பார்த்த அவரது தாயார் கதறிக்கொண்டு தடுக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் அதனை கண்டுகொள்ளாமல் சரமாரியாக வெட்டி, அருகில் கிடந்த கல்லை எடுத்து இருவரது தலையிலும் போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

மாலை நேரத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவல் அறிந்ததும் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அவர்கள் இருவரின் உடலையும் கைப்பற்ற முயன்றனர்.

அப்போது அவரது தாயார் மற்றும் உறவினர்கள் கொலையாளிகளை பிடிக்கும் வரை இருவரின் உடலையும் எடுக்கக் கூடாது என்று தகராறு செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் போலீசார் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க மாவட்ட எல்லைகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் தனிப்படை போலீசார் மதுரை நகர் முழுவதும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story