ரேஷன் கடைகள் மூலமாக இலவச முககவசம் வழங்கும் திட்டம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


ரேஷன் கடைகள் மூலமாக இலவச முககவசம் வழங்கும் திட்டம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 July 2020 11:45 PM GMT (Updated: 27 July 2020 10:39 PM GMT)

ரேஷன் கடைகள் மூலமாக இலவச முககவசம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், நோய் தொற்றிலிருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவும் உள்ளது.

மத்திய அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில், அனைத்து பொது இடங்கள் மற்றும் பணியிடங்களிலும், பிற இடங்களுக்கு பயணிக்கும்போதும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக தரமான மறு பயன்பாட்டு முககவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 தரமான மறு பயன்பாட்டு முககவசங்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கும் வகையில், முதல் கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு 4.44 கோடி இலவச தரமான மறு பயன்பாட்டு முககவசங்கள் ரூ.30 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளின் மூலம் முககவசங்கள் வழங்கும் திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்படுகிறது.ரேஷன் கடைகள் மூலமாக இலவச முககவசம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் நேற்று 5 பேருக்கு முககவசத்தை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.காமராஜ், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச்செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக கமிஷனர் க.பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை கமிஷனர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story