நெல்லையில் போலீஸ் வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம்: உதவி ஆய்வாளர் ஐயப்பன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு


நெல்லையில் போலீஸ் வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம்: உதவி ஆய்வாளர் ஐயப்பன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு
x
தினத்தந்தி 28 July 2020 4:05 AM GMT (Updated: 28 July 2020 4:05 AM GMT)

நெல்லை கீழநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் சண்முகையா போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் ஐயப்பன் மீது 2 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை கீழநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் சண்முகையா போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் ஐயப்பன் மீது  அஜாக்கிரதையாக இருந்து மரணம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் இயக்குதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்ததுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வழக்கின் விவரம்:-

பாளையங்கோட்டையை அடுத்த கீழ நத்தம் தெற்கூர் தங்கம்மன் கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் சீனி மகன் சண்முகம் (வயது 35). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 25-ந்தேதி பாளையங்கோட்டை சீவலப்பேரி கிருபா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது நெல்லை மாநகர போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் பணியை முடித்துக்கொண்டு, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிள் சண்முகம் மீது மோதியது. இதில் சண்முகம், அய்யப்பன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் சண்முகம் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் வெள்ளத்துரை தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், “சண்முகம் மீது மோட்டார் சைக்கிளை மோதிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பலியான சண்முகம் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உடலை வாங்க மாட்டோம்” என்று தெரிவித்தனர்.


இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்ததை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

Next Story