அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று எதிரொலி: கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்திக்கொண்டார்


அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று எதிரொலி: கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்திக்கொண்டார்
x
தினத்தந்தி 29 July 2020 11:30 PM GMT (Updated: 29 July 2020 9:35 PM GMT)

கவர்னர் மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கவர்னர் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்களில் சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு மற்றும் தீணைப்பு வீரர்கள் 147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் 84 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட 84 பேரும் கவர்னர் மாளிகையின் மூத்த அதிகாரிகள் மற்றும் கவர்னருடன் எந்த தொடர்பிலும் இல்லை. இருந்தபோதிலும் கவர்னர் மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் கவர்னர் மாளிகையின் மக்கள் தொடர்பு அதிகாரியான கூடுதல் இயக்கு னருக்கும், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த வாரம் கவர்னர் மாளிகையில் பணியில் இருந்த மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த வாரம் பணியில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, 38 பேருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கவர்னர் மாளிகையில் உள்ள மருத்துவ அதிகாரி கவர்னருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவர் நலமுடன் இருப்பது தெரியவந்தது. இருந்தபோதிலும் கவர்னரை 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள டாக்டர் அறிவுறுத்தினார். எனவே கவர்னர் பன்வாரிலால் புரோகித் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story