ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற கூடாது; ஐகோர்ட்டில் ஜெ.தீபா மீண்டும் வழக்கு


ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற கூடாது; ஐகோர்ட்டில் ஜெ.தீபா மீண்டும் வழக்கு
x
தினத்தந்தி 1 Aug 2020 7:54 PM GMT (Updated: 1 Aug 2020 7:54 PM GMT)

ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதால் அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் ஜெ.தீபா மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சென்னை,

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசான அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சட்டப்பூர்வமான வாரிசுகளான எங்களை கேட்காமல், வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையா சொத்துக்கள் அனைத்தும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தமிழக அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. அதிகாரிகள், டாக்டர்கள் என 147 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த நேரத்தில் வழக்கில் சம்மந்தப்பட்ட இடத்தை அரசு தன்வசம் எடுத்துக்கொள்வது, ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாக அழித்துவிடும்.

வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சென்னை கலெக்டர் மற்றும் நில ஆர்ஜித அதிகாரி எடுத்துவிடக்கூடாது என்று கோரி தமிழக அரசுக்கு கடந்த ஜூன் 12-ந்தேதி மனு அனுப்பினேன்.

இந்நிலையில், ஜூன் 29-ந்தேதி ஐகோர்ட்டு என்னை ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நிர்வாகியாக நியமனம் செய்தும், 6 மாதங்களுக்குள் ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவரது கடன்கள் ஆகியவற்றை கண்டறிந்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் போயஸ் கார்டன் வீட்டை ஆய்வு செய்யக்கூட எனக்கு அதிகாரிகள் அனுமதி தரவில்லை. மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை.

எனது மூதாதையர்களின் சொத்துக்களை குறிப்பாக நகைகள், உடைகள் பெண்களின் உடமைகளை அரசு எடுப்பது பெண்மையை இழிவுபடுத்தும் செயலாகும். எனது தாய் போல் இருந்த ஜெயலலிதாவை அவமானப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

வேதா நிலையத்தில் ஏராளமான மதிப்பு மிக்க பொருட்கள், தங்க, வைர, பிளாட்டின, வெள்ளி நகைகள் போன்றவை புராதனமானவை ஆகும். அவை எனது தாத்தாவிற்கு மைசூர் ‘ராயல் பேலஸ்’ டாக்டர் ஒருவரால் வழங்கப்பட்டவை. அவற்றை ஜெயலலிதா மிக பத்திரமாக பராமரித்து வந்தார். அவற்றை தொட யாருக்கும் அனுமதி வழங்கமாட்டார். அப்படிப்பட்ட பொருட்களை அரசு கையகப்படுத்துவது, ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஜெயலலிதாவின் உயர் மதிப்புள்ள நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக வேதா நிலையத்தை மாற்ற தமிழக மக்கள் விரும்பவில்லை. நாங்கள் எடுத்த கருத்து கணிப்பில் பல மாவட்டங்களை சேர்ந்த 89 சதவீதம் பேர் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான, சட்ட பூர்வ வாரிசுகளான நாங்கள் இதற்கு அனுமதிக்க மாட்டோம். எனவே, வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றும் தென்சென்னை வட்டார வருவாய் அதிகாரி கடந்த ஜூலை 22-ந்தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story