போலி சான்றிதழ் மூலம் பெட்ரோல், கியாஸ் நிலையங்கள்: போலீசாருக்கு ஆவணங்களை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு


போலி சான்றிதழ் மூலம் பெட்ரோல், கியாஸ் நிலையங்கள்:  போலீசாருக்கு ஆவணங்களை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Aug 2020 9:45 PM GMT (Updated: 1 Aug 2020 8:01 PM GMT)

போலி சான்றிதழ் மூலம் பெட்ரோல், கியாஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தும் போலீசார் கேட்கும் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் பெட்ரோல், கியாஸ் விற்பனை நிலையங்களை தொடங்க முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெயரில் போலி தடையில்லா சான்றிதழை தயாரித்து மோசடி செய்த ஒரு கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதில், சிவக்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்குகளுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘போலி சான்றிதழ் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 67 பெட்ரோல், கியாஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை குறிப்பிட்டு இருந்தார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஐகோர்ட்டு நீதிபதிகள், தமிழகம் முழுவதும் இதுபோல் போலி சான்றிதழ் மூலம் எத்தனை பெட்ரோல், கியாஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால் அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனால் இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரர்களாக சேர்த்து கருத்துகளை கேட்கவேண்டும் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்பட 5 நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தது. இதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால், 5 நிறுவனங்களின் கோரிக்கைகளை நீதிபதிகள் ஏற்றனர்.

இதன்பின்னர் அரசு குற்றவியல் வக்கீல் ஆர்.பிரதாப்குமார், ‘போலி சான்றிதழ் குறித்து விசாரணை நடத்தும் போலீசார் முன்அனுமதி பெற்றுத்தான் ஆவணங்களை சரிபார்க்க வர வேண்டும் என்று சென்னையில் உள்ள மத்திய அரசின் வெடிமருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார்’ என்று நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், “அலுவலக வேலை நேரத்தில் போலீசார் சென்றால், விசாரணைக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்” என்று உத்தரவாதம் அளித்தார். இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ் மூலம் எத்தனை பெட்ரோல், கியாஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன? என்பது குறித்த விசாரணையில் சிக்கல் இருப்பதாகவும், ஆவணங்களை சரி பார்க்க பல சிரமங்கள் ஏற்படுவதாகவும் டி.ஜி.பி. தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘போலி சான்றிதழ் குறித்து ஆய்வு செய்ய போலீசார் எப்போது வந்தாலும் அவர்களுக்கு அந்த ஆவணங்களை காட்டுவதுடன், நகல் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் இடையே, சென்னை அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரியின் நிதி நிலை குறித்து பேச்சு எழுந்தது. அப்போது இந்த வழக்குகளில் ஆஜரான வக்கீல்கள் ஆர்.சி.பால்கனகராஜ் ரூ.1 லட்சமும், அப்துல்சலீம் ரூ.25 ஆயிரமும், எம்.தெய்வானந்தம், வி.லட்சுமிநாராயணன், எம்.விஜயன் ஆகியோர் தலா ரூ.10 ஆயிரமும் நன்கொடை வழங்கினர். அவர்களை நீதிபதிகள் வெகுவாக பாராட்டினர்.

Next Story