தமிழகத்தில் கொரோனாவுக்கு பச்சிளம் குழந்தை உள்பட 112 பேர் பலி - இதுவரையில் 4,461 பேர் சாவு


தமிழகத்தில் கொரோனாவுக்கு பச்சிளம் குழந்தை உள்பட 112 பேர் பலி - இதுவரையில் 4,461 பேர் சாவு
x
தினத்தந்தி 5 Aug 2020 10:30 PM GMT (Updated: 5 Aug 2020 8:55 PM GMT)

தமிழகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு பச்சிளம் குழந்தை உள்பட 112 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தம் 4 ஆயிரத்து 461 பேர் இறந்துள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 59 ஆயிரத்து 156 பேருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 5 ஆயிரத்து 175 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 3 ஆயிரத்து 33 ஆண்களும், 2 ஆயிரத்து 142 பெண்களும் அடங்குவார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேருக்கும் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 244 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 708 பேரும் நேற்று பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகபட்சமாக சென்னையில் 1,044 பேருக்கும், செங்கல்பட்டில் 487 பேருக்கும், திருவள்ளூரில் 472 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 28 லட்சத்து 45 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த பட்டியலில், 1 லட்சத்து 65 ஆயிரத்து 509 ஆண்களும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 924 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 27 பேரும் இடம் பெற்றுள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 13 ஆயிரத்து 520 பேரும், 60 வயதுக்கு உட்பட்ட முதியவர்கள் 34 ஆயிரத்து 334 பேரும் அடங்குவார்கள்.

கொரோனா உயிரிழப்புகளை பொறுத்தவரையில் நேற்று அரசு மருத்துவமனைகளில் 84 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 28 பேரும் என மொத்தம் 112 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது ஒரேநாளில் நிகழ்ந்த அதிகபட்ச உயிரிழப்பாகும். இதில் சென்னையில் 25 பேரும், கடலூரில் 9 பேரும், செங்கல்பட்டு, தேனி, வேலூரில் தலா 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காஞ்சீபுரம், மதுரை, திருவள்ளூரில் தலா 6 பேரும், கோயம்புத்தூரில் 5 பேரும், ராணிப்பேட்டையில் 4 பேரும், சிவகங்கை, திருவண்ணாமலை, நெல்லையில் தலா 3 பேரும், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருச்சியில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவர் என 26 மாவட்டங்களில் மொத்தம் 112 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளது. அதேபோல் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 4 ஆயிரத்து 461 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 31 பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 997 பேரும், செங்கல்பட்டில் 460 பேரும், விருதுநகரில் 454 பேரும் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 பேர் தமிழகத்தில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 54 ஆயிரத்து 184 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 846 பேர், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 653 பேர், ரெயில்கள் மூலம் வந்த 426 பேர், சாலைவழியாக வந்த 3 ஆயிரத்து 717 பேர் மற்றும் கப்பல் மூலம் வந்த 34 பேர் என இதுவரை 5 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story