தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 110 பேர் கொரோனாவுக்கு பலி


தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 110 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 6 Aug 2020 10:45 PM GMT (Updated: 6 Aug 2020 9:45 PM GMT)

தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக உயிரிழப்பு 100-ஐ தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் 31 மாவட்டங்களில் 110 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 65 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,380 ஆண்கள், 2,304 பெண்கள் என மொத்தம் 5,684 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 36 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 266 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 699 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,091 பேரும், செங்கல்பட்டில் 408 பேரும், காஞ்சீபுரத்தில் 336 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 7 பேரும், பெரம்பலூரில் 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 29 லட்சத்து 10 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த பட்டியலில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 889 ஆண்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 228 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 27 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 13 ஆயிரத்து 786 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரத்து 33 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 88 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேரும் என 110 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக உயிரிழப்பு 100-ஐ தாண்டியுள்ளது. இதில் சென்னையில் 22 பேரும், மதுரையில் 9 பேரும், வேலூரில் 7 பேரும், கோவையில் 6 பேரும், செங்கல்பட்டு, விருதுநகரில் தலா 5 பேரும், திண்டுக்கல், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 4 பேரும், திருச்சி, தேனி, தென்காசி, பெரம்பலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூரில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடியில் தலா இருவரும், விழுப்புரம், நெல்லை, திருப்பூர், திருவாரூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நீலகிரி, அரியலூரில் தலா ஒருவரும் என 31 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 4,571 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 272 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,162 பேரும், செங்கல்பட்டில் 447 பேரும், திருவள்ளூரில் 394 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 87 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 53 ஆயிரத்து 486 பேர் உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 852 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 675 பேரும், ரெயில் மூலம் வந்த 426 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 731 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 5 ஆயிரத்து 718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்று புதிதாக காஞ்சீபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 61 அரசு, 65 தனியார் நிறுவனம் என மொத்தம் 126 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story