சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழே வந்தது


சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழே வந்தது
x
தினத்தந்தி 7 Aug 2020 10:30 PM GMT (Updated: 7 Aug 2020 9:44 PM GMT)

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 119 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 65 ஆயிரத்து 189 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,445 ஆண்கள், 2,435 பெண்கள் என மொத்தம் 5,880 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 267 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 754 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 984 பேரும், திருவள்ளூரில் 388 பேரும், தேனியில் 351 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 16 பேரும், நீலகிரியில் 13 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 29 லட்சத்து 75 ஆயிரத்து 657 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 24 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த பட்டியலில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 334 ஆண்களும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 663 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 27 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 14 ஆயிரத்து 53 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரத்து 787 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 78 பேரும், தனியார் மருத்துவமனையில் 41 பேரும் என 119 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 24 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், சேலம், தூத்துக்குடி, திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 6 பேரும், வேலூர், கன்னியாகுமரி, காஞ்சீபுரம், கோவையில் தலா 5 பேரும், கிருஷ்ணகிரி, தென்காசி, தேனி, நெல்லையில் தலா 4 பேரும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூரில் தலா 3 பேரும், கள்ளக்குறிச்சி, மதுரை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகரில் தலா இருவரும், திருப்பத்தூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கரூர், ஈரோடு, அரியலூரில் தலா ஒருவரும் என 30 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 4,690 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 488 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,103 பேரும், திருவண்ணாமலையில் 620 பேரும், திருவள்ளூரில் 449 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 575 பேர் குணம் அடைந்துள்ளனர். சிகிச்சையில் 52 ஆயிரத்து 759 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டமாக சென்னை திகழ்கிறது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி 2 ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜூலை மாத இறுதியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,100 பேர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் 51 நாட்களுக்கு பின்னர் மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் 984 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி உள்ளனர். 11 ஆயிரத்து 606 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.


Next Story