பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்


பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 Aug 2020 12:00 AM GMT (Updated: 8 Aug 2020 9:32 PM GMT)

பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது. எனவே அரசின் வழிமுறைகளை கடைபிடிப்பது மிக, மிக அவசியம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

சேலம், -

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே இருமுறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அரசு வழங்கிய ஆலோசனைகளை ஏற்று, சிறப்பான முறையில் கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் நடைபெற்ற காரணத்தால், சேலம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

ஊரடங்கு அமலில் இருக்கிற காலகட்டத்தில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்குதடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் 100 சதவீதம் இயங்கி வருகின்றன. வேளாண் பணிகள் 100 சதவீதம் நடைபெற்று வருகிறது. 100 நாள் வேலை திட்டம் எவ்விதத் தடையுமில்லாமல் அரசு அனுமதி அளித்த காலத்தில் இருந்து தற்போதுவரை 100 சதவீத பணியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.

சிறப்பு குறைத்தீர்ப்பு திட்டம்

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற பேரவையில், விதி 110-ன் கீழ், முதல்-அமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தேன். முதற்கட்டமாக, அத்திட்டத்தினை சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தொடங்கி, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நானே நேரில் சென்று, மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் பொதுமக்களை சந்தித்து, மனுக்களைப் பெற்றேன்.

அதில் தகுதியான மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. அந்த மனுக்களில் பெரும்பாலானோர் கோரியிருந்த முதியோர் உதவித்தொகை தகுதியானவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு, புதிய பட்டாக்கள், பட்டா மாறுதல்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், தங்கள் பகுதியிலுள்ள பிரச்சினைகள் குறித்து கொடுத்த மனுக்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். சேலம் மாவட்டத்தில், அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இந்த நேரத்திலும்கூட பணிகள் தொய்வில்லாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல, நோய்த் தொற்று குறையக் குறைய, தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்துக் கொண்டிருக்கின்றது.

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றபோது நோய்ப் பரவல் படிப்படியாகக் குறையும். இதுகுறித்து ஏற்கனவே அரசு, பலமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிக, மிக அவசியம். மக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இதைத் தடுக்க இயலாது. எனவே பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story